Thursday, April 14, 2011

ஒரு சக்ரவர்த்தியின் வீழ்ச்சி !

ஒரு சக்ரவர்த்தியின் வீழ்ச்சி !

வடிவேலு !  இதுவரை இந்த உலகம் கண்டிராத அளவுக்கு சினிமா துறையில் ஒரு புரட்சி செய்த வடிவேலு, திரை உலகின் முடி சூடா சக்ரவர்த்தியாக திகழ்ந்துகொண்டிருகிறார்.  முக்கியமாக தமிழ் திரை உலகம் உலகுக்கு தந்த சொத்து இவர் என்றால் அது கொஞ்சம் கூட மிகையில்லை. 

நடிப்பிலேயே மிக கடினமான நகைச்சுவை இவருக்கு வெண்ணையில் கத்தியை போன்றது. தலைமுறை நடிகர்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இவர் ஒரு பிறவி நகைச்சுவை மன்னன். 

இவருடைய நடிப்பும் பேச்சும் தமிழ் மக்களிடையே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. இவருடைய பாணியை பல நட்சத்ர நடிகர்களும் கூட காப்பியடிப்பது அனைவரும் அறிந்ததே. 

இப்படிப்பட்ட ஒரு சிறந்த கலைஞன் இரட்டை கோபுரம் போல் சரிந்து விழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு சிறந்த கலைஞன் தனக்கு என்று ஒரு தனித்துவத்தை உருவாக்கி அதில் நிலையாய் நின்று தன் பால் அனைவரையும் ஈர்க்கும் சக்தி படைத்தவன். 

அப்படிப்பட்ட சிறந்த கலைஞனான வடிவேலு தனக்கென்று உள்ள தனித்துவத்தை உதறி தள்ளி, யாருமே கண்டிராத உயரத்திலிரிந்து பல படிகள் கீழே இறங்கி கட்சி சாயம் பூசிக்  கொண்டார். 

கருப்பு நாகேஷ் என்று அழைத்த பொது கண்ணியமாக தலை வணங்கி ஏற்றுகொண்ட வடிவேலு, கருப்பு எம்ஜியார் என்று விஜயகாந்த் அழைக்கப்படுவது பற்றி விமர்சனம் செய்திருக்க கூடாது. 

பல கலைஞர்களை திரை துறைக்கு அறிமுகப்படுத்தி வாழ்வு கொடுத்த வடிவேலு, யானை பலம் கொண்டிருந்தாலும், அரசியல் முதலைகள் உள்ள தண்ணீரில் காலை விட்டது தன் தலையில் தானே மண்ணள்ளி 
 போட்டுகொண்டதற்கு சமம். ஏன் தெரியுமா? நேற்று நடந்த தேர்தலில், நிச்சயமாக அதிமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதா அவர்கள் தனி பெரும்பான்மை பெற்று விடுவார்கள், அப்போது நீங்கள் உங்கள் முகத்தை எங்கு வைத்து கொள்வீர்கள்?    உங்கள் பாசாங்கு பலிக்குமா? முதலிலேயே சிந்தித்திருந்தால் வரப்போகும் பல  பிரச்சனைகளிலிருந்து உங்களை நீங்கள் காப்பாற்றிகொண்டிருக்கலாம்.  நாங்களும் உங்களை நல்ல நகைச்சுவை சக்கரவர்த்தியாக கொண்டாடியிருக்கலாம். 

முன்னோர்கள் சொன்ன மொழிகளுக்கு அர்த்தம் கண்டவர்கள் பிழைத்துக்கொள்வார்கள் - நுணலும் தன் வாயால் கெடும்! 

ஜோசப்